கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குறித்து தவறாகவும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் என்ற இருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா ((UAPA)) சட்டப்பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் கொடுத்த தகவல்களின் பேரில் இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மெகபூப் பாஷா மற்றும் ஜெபியுல்லா, மன்சூர்கான், அஜ்மத்துல்லா ஆகிய மேலும் 4 பேர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குறித்து தவறாகவும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்ட தேங்காய்பட்டணம் பகுதியை சேர்ந்த நவாஸ் ஷாகுல் என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை போலீசார் கைது செய்துள்ளனர். நவாஸ் ஷாகுலுக்கு தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பு உள்ளதா? சமீமுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? மேலும் நவாஸ் ஷாகுலுக்கு தெரிய வாய்ப்புள்ள தகவல்கள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.



0 Comments