தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் சித்தியை கொன்று கிணற்றில் உடலை வீசிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள புதுப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி செல்வபாக்கியம் (65). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விமலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கிணற்றில் கிணற்றில் இருந்து மீட்டனர். அப்போது அவரது தலையில் ரத்தக் காயம் இருந்தது, மேலும் கல்லைக்கட்டி கிணற்றில் அவரது உடல் வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் விசாரணையில், சொத்துப் பிரச்சனையில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.
செல்வபாக்கியத்தின் உடன்பிறந்த சகோதரி ராஜபுஷ்பம் (68), இவர்கள் இருவருமே மாரியப்பனை திருமணம் செய்துள்ளனர். செல்வபாக்கியத்திற்கு ஒரே மகன், அவர் திருமணமாகி ஓட்டப்பிடாரத்தில் வசித்து வருகிறார். ராஜபுஷ்பத்திற்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2வது மகன் பெருமாள்சாமி (46), தூத்துக்குடி மின்பிடி துறைமுகம் எதிரே உள்ள கடையில் புராட்டா மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது தந்தை மாரியப்பனுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை செல்வபாக்கியம், ராஜபுஷ்பம் ஆகிய இருவருக்கும் தலா 3 ஏக்கர் பிரித்து எழுதி வைத்துள்ளார்.
ஆனால், இந்த விபரத்தைக் மறைத்து, செல்வபாக்கியம் முழு நிலத்தையும் விவசாயம் செய்து அனுபவித்து வந்துள்ளார். இந்த விபரம் தெரியவரவே பெருமாள்சாமி தனது சித்தி செல்வபாக்கியத்திடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அங்கிருந்த மண்வெட்டி கனையால் செல்வபாக்கியத்தின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலில் கல்லைக்கட்டி அங்குள்ள கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த பெருமாள்சாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 Comments