முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், முரசொலி அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலினுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் சென்னை சாஸ்திரி பவனில் விசாரணை நடைபெறும் என்றும், அதற்குத் தேவையான ஆவணங்கள், கோப்புகள், தொடர்பான அறிக்கைகளுடன் ஆஜராகுமாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணை நடத்துவார் என்றும், புகார்தாரரும் விசாரணையின்போது அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments