தமிழகத்தில் பருவமழை வழக்கத்தைவிட 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், புவனகிரியில் 8 செ.மீ மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பருவமழை வழக்கத்தை விட 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்.1 முதல் இன்று வரை மொத்தமாக 31 செ.மீ மழை பெய்யவேண்டிய நிலையில், 28 செ.மீ மழையே பெய்துள்ளது. சென்னையில் 50 செ.மீ. மழைக்கு 30 செ.மீ மழையும், புதுவையில் 53 செ.மீ மழைக்கு 33 செ.மீ மழையுமே பெய்துள்ளது".



0 Comments