தஞ்சாவூர் அருகே ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்த நியைில், பள்ளி தொடங்கிய முதல் நாளே ரேஷன் கடை கட்டிடத்ததை வகுப்பறையாக மாற்றிஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியை சேர்ந்தது கருவிழிக்காடு கிராமம். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் இந்த பள்ளியில் சுமார் 30 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து சுவரில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இடிந்து விழும் நிலையில், கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே ஆசிரியைகள் பள்ளிக்கு வந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அழைத்து சென்று அங்கு உட்கார வைத்து பாடம் நடத்த தொடங்கினர். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு முன் திரண்டதோடு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் கூறியதாவது; 1967 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த பள்ளி திறக்கப்பட்டது. பாரம்பரியமிக்க இந்த பள்ளியின் கட்டிடம் சில ஆண்டுகளாகவே சேதமடைந்து காணப்படுகிறது. இதனை நாங்கள் கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறி மனுக்கள் கொடுத்தோம்.
கட்டிடம் இடியும் தருவாயில் உள்ளதால் கடந்த கல்வி ஆண்டில் கூட பள்ளி கட்டிடத்தில் பள்ளி நடைபெறவில்லை அருகில் உள்ள மாடி வீடு ஒன்றில் பள்ளியை நடத்தினர். இது அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். பள்ளி திறப்பதை அறிவித்த அரசு பள்ளி கட்டிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்திருக்க வேண்டாமா. தனியார் வீட்டிலும், ரேஷன் கடையிலும் வகுப்புகளை நடத்துவது என்பது பெரும் வெட்கக்கேடு. கடந்த ஆண்டு வீடு, இப்போது ரேஷன் கடை என்ன ஒரு அவல நிலை. பிள்ளைகள் மாற்று பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 3 கிலோ மீட்டர் துாரம் சென்று படிக்க வேண்டும். உடனே இதற்கு நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டி கொடுத்து பள்ளியை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்" என்றார்.


0 Comments