மீண்டும் பாரத பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக, ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதும் முதன் முதலில் அண்டை நாட்டுக்குத்தான் சென்றார். அதே போன்று இந்த தடவையும் பக்கத்து நாட்டுக்கே செல்ல வேண்டும் என்ற முடிவின்படி அவர் மாலத்தீவு செல்கிறார். சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. அது தேர்தலில் ஓய்ந்த பிறகு தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்ல திட்டமிட்டார். ஜூன் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் மாலத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல் வெளியானது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடியின் மாலத்தீவு மற்றும் இலங்கை பயண தேதியை வெளியுறவுத்துறை அறிவுத்துள்ளது. ஜூன் 8-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இரண்டு நாட்கள் மாலத்தீவில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், 9-ம் தேதி மாலத்தீவிலிருந்து திரும்பும் வழியில் இலங்கைக்கு செல்வார் என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.


0 Comments