டிடிவி - தங்கத்தமிழ்செல்வன் மோதல் - ஆடியோவால் பரபரப்பு..!

Breaking News

header ads

டிடிவி - தங்கத்தமிழ்செல்வன் மோதல் - ஆடியோவால் பரபரப்பு..!



டி.டி.வி.தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்துவேறுபாடு காரணமாக . அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், டி.டி.வி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும், 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். முக்கிய நிர்வாகிகள் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதனால் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலரும் டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.



அ.தி.மு.க.வில் இருந்து தங்கதமிழ்செல்வனிடம் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்ட போதிலும், தங்கதமிழ்செல்வன் அதை மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது டி.டி.வி.தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், ‘அண்ணன் எங்கே இருக்கிறார். இந்த மாதிரி அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிப்பாட்டச் சொல்லுப்பா. நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீ உள்பட அழிந்து போய்விடுவீர்கள். நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறீர்கள். நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன், நீ பார். என்ன நடக்கிறது என்று நீ பார். உங்க டி.டி.வி.தினகரனிடம் சொல்லு. இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்றுப் போய்விடுவாய். என்றைக்கும் ஜெயிக்க மாட்டாய்’ இவ்வாறு தங்கதமிழ்செல்வன் பேசுவதாக உள்ளது. அதில் ஒரு சில ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.

ரகசிய கூட்டம்

இதுகுறித்து தேனி மாவட்ட அ.ம.மு.க. வட்டாரத்தில் கேட்டபோது, ‘அ.ம.மு.க. நிர்வாகிகளான உசிலம்பட்டி மகேந்திரன், மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை ஆகியோர் நேற்று முன்தினம் தேனிக்கு வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வனுக்கு தெரியாமல் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தேனி தொகுதியில் அ.ம.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து விவரங்கள் கேட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இதை அறிந்ததால் தங்கதமிழ்செல்வன் கோபத்தில் இப்படி பேசி இருக்கலாம்’ என்றனர்.

இந்த தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments