உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றியது பாகிஸ்தான்.
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. 309 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்து 49 ரன்களில் தோல்வி அடைந்தது. ஹாரிஸ் சோஹைலின் அதிரடி ஆட்டம், வகாப் ரியாஸ், சதாப் கானின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியமானது.
இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு போட்டி ரத்து என 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி மீதமுள்ள 3 போட்டிகளையும் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 7 போட்டிகளில் 5 தோல்விகல், ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து என 3 புள்ளிகளுடன் உள்ளது. ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் அணி அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்ட நிலையில், 2-வது அணியாக தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.
உலகக்கோப்பை போட்டியில் இதுவரை ஒருமுறைகூட தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்தது இல்லை. உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச சேஸிங் இலக்கு என்பது கடந்த 2011-ம் ஆண்டு நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 296 ரன்களை துரத்தியதே. அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளில் 300 ரன்களுக்கு மேல் தென் ஆப்பிரிக்க அணி சேஸிங் செய்ய முடியாத அளவுக்கு தடுமாறி வந்தது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு டர்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



0 Comments